Daily ThanthiMaalaimalarThanthi TVDTNext
Articles
ஏப்ரல் 16, 9:00 am3 min read

'வாழ்க, ஒழிக கோஷம்' இல்லை.. கட்சி கொடிக் கம்பங்கள், சுவர் விளம்பரம் இல்லாத கிராமம்

'வாழ்க, ஒழிக கோஷம்' இல்லை.. கட்சி கொடிக் கம்பங்கள், சுவர் விளம்பரம் இல்லாத கிராமம்

Advertisement

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு கிராமம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கட்சி கொடிகள், சுவரொட்டிகள் இடம்பெற அனுமதிக்காமல் அமைதியான அரசியலுக்கு உதாரணமாக திகழ்கிறது.

தேர்தல் வந்தாலே சுவர் விளம்பரமும், போஸ்டர் கலாசாரமும் கொடி கட்டி பறக்கும். குறிப்பாக கிராமங்களில் அரசியல் கட்சிகள் தங்களது சின்னங்களை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக சுவர் விளம்பரங்களை செய்ய அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக முக்கிய அரசியல் கட்சிகள் முன்கூட்டியே கட்டிட உரிமையாளர்களிடம் முன்பதிவு செய்வதுண்டு.

Advertisement

அமைதியான கிராமம்

அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் இல்லாமல் தேர்தல் பிரசாரம் நடக்கும் கிராமம் தமிழகத்தில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படி ஒரு கிராமம் இருக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு கிராமம்தான் அது.

அந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கட்சி கொடிகள், சுவரொட்டிகள் இடம்பெற கிராம மக்கள் அனுமதிப்பதில்லை.

பிரசாரம் எப்படி நடக்கிறது?

ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாகனங்களிலும், வீடு, வீடாக சென்றும் தங்களது சின்னத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். கட்சிக்கொடிகள், சுவர் விளம்பரங்கள் இல்லை என்பதால் கிராம மக்கள் அரசியலில் தீவிரம் காட்டவில்லை என்று நினைத்து விட முடியாது.

முருங்கத்தொழுவு கிராமத்திலும் முக்கிய அரசியல் கட்சியின் தீவிர தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளனர். அவர்களும் ஊர் கட்டுப்பாட்டுக்கு தலைவணங்கி செயல்படுகின்றனர்.

வாக்களிப்பில் தீவிரம்

அதேபோல் தேர்தலில் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் கிராம மக்களுக்கு ஆர்வம் குறைந்ததில்லை. தேர்தல் நாளில் காலையிலேயே வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு படை எடுக்கின்றனர். அங்கு வரிசையில் காத்திருந்து தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்கை செலுத்தி வருகின்றனர்.

'வாழ்க.. ஒழிக... கோஷம்' இல்லாமல் அரசியலில் ஈடுபாடு கொண்டு, ஜனநாயக கடமையாற்றி அமைதியான அரசியலுக்கு உதாரணமாக முருங்கத்தொழுவு கிராம மக்கள் திகழ்கின்றனர்.

Advertisement