சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்தை நிலைநாட்டிய பி.எச்.பாண்டியன்

Advertisement
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே பிறந்த பி.எச்.பாண்டியன், அ.தி.மு.க. சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றி, சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்தை நிலைநாட்டிய வரலாற்று சம்பவத்தை நிகழ்த்தியவர்.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன். இவர் 1945-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி பிறந்தார். சட்டம் படித்து 1968-ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கினார். அப்போது பரபரப்பான வழக்காக இருந்த ஆளவந்தார் கொலை வழக்கை அரசு வக்கீலாக இருந்து நடத்திய ஜே.எஸ்.அதனேசியசிடம் இளம் வழக்கறிஞராக சேர்ந்து பயிற்சி பெற்றார்.
எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கியபோது பி.எச்.பாண்டியன் அந்த கட்சியில் இணைந்தார். 1972 முதல் 1988-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. வக்கீல் அணியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்தார். இவர் சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977, 1980, 1984-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வானார்.
Advertisement
1989 தேர்தலில் தனித்த வெற்றி
1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து களம் கண்டது. அதில் அ.தி.மு.க.வின் வி.என்.ஜானகி ராமச்சந்திரன் அணியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒருவர் பி.எச்.பாண்டியன் மட்டுமே. இதுதவிர அவர் 1999-ம் ஆண்டு நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக வெற்றி பெற்றார். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளராகவும் இருந்தார்.
சபாநாயகர் பதவி
1980 முதல் 1985-ம் ஆண்டு வரை தமிழக சட்டமன்றத்தில் துணை சபாநாயகராக பதவி வகித்தார். 1985 முதல் 1989-ம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்தார். அப்போது பல அதிரடி தீர்ப்புகளை வழங்கினார். சபாநாயகர் பதவிக்கான அதிகாரத்தை நிலைநாட்டினார்.
இவர் சபாநாயகராக இருந்தபோது, 10 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்ட நகலை எரித்ததைக் காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்தார்.
பத்திரிகை ஆசிரியர் சம்பவம்
1987-ம் ஆண்டு சட்டமன்றத்தை விமர்சிக்கும் வகையில் வாரப்பத்திரிகையின் அட்டைப்பட கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டது. இதைக் கண்டித்து அந்த பத்திரிகையின் ஆசிரியருக்கு சம்மன் அனுப்பினார். இதையடுத்து சட்டமன்றத்துக்கு வந்த பத்திரிகை ஆசிரியரை கூண்டில் ஏற்றி, அவரை மன்னிப்பு கேட்க உத்தரவிட்டார். இதற்கு அவர் மறுத்ததால் 3 மாதம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு, பி.எச்.பாண்டியனுக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை வாங்க மறுத்த பி.எச்.பாண்டியன், கோர்ட்டைவிட சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து நிலைமையை சரிசெய்யும் வகையில், முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., சிறையில் இருந்து பத்திரிகை ஆசிரியரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
பெருமைகளும் மறைவும்
1988-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் ஜார்ஜ் கோட்டையில் பி.எச்.பாண்டியன் தேசியக்கொடி ஏற்றினார். இவரே கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய முதல் சட்டமன்ற சபாநாயகர் ஆவார். இப்படி பல பெருமைகளுக்கு உரியவராக திகழ்ந்த பி.எச்.பாண்டியன் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி காலமானார்.
குடும்பம்
பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்தார். இவருடைய மகன்களில் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன் 2001-முதல் 2006 வரை சேரன்மாதேவி சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் அ.தி.மு.க மேல்சபை எம்.பி.யாகவும், 2021-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார்.
Advertisement
Related Articles

2026 அஇஅதிமுக தேர்தல் அறிக்கை: மூடப்பட்ட அம்மா உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும்

கிளைச்செயலாளர் டூ பொதுச்செயலாளர் - எடப்பாடி பழனிசாமி எனும் ஆளுமை!




