100 ஆண்டுகளுக்கு முன்பே முதல்-அமைச்சரான சுயேச்சை: மறக்க முடியாத ப.சுப்பராயன்
Advertisement
தமிழக அரசியல் வரலாற்றில் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சுயேச்சை வேட்பாளர் முதல்-அமைச்சரான அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
தமிழகத்தில் 1926-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற அதிசயம் நிகழ்ந்தது. அந்த அதிசய நாயகன் ப.சுப்பராயன்.
1889-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி குமாரமங்கலம் கிராமத்தில் பிறந்தவர் ப.சுப்பராயன். தந்தை பரமசிவ கவுண்டர். குமாரமங்கலம் ஜமீன்தார். தாய் பாவாயி. 8 வயதிலேயே தந்தையை இழந்த சுப்பராயன், கல்வியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கற்று தேர்ந்தார்.
Advertisement
சுயேச்சை வேட்பாளர்
லண்டனில் சட்டம் படித்த இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியை தொடங்கினார். லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய சுப்பராயன், கோபால கிருஷ்ண கோகலேயை சந்தித்து அவர் நடத்தி வந்த இந்திய ஊழியர் சங்கத்தில் தனது சமூக பணியை தொடங்கினார்.
பின்னர் நீதிக்கட்சியின் உறுப்பினராக செயல்பட்ட அவர், சில கருத்து வேறுபாடுகளால் அதில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் தனது சமூக பணியை அவர் கைவிடவில்லை. அந்த காலகட்டத்தில்தான் 1926-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் சேலம் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளராக சுப்பராயன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முதல்-அமைச்சர்
அப்போது மொத்தம் 132 உறுப்பினர்களை கொண்ட சென்னை மாகாண சட்டசபைக்கு 98 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாகவும், 34 பேர் கவர்னர்கள் மூலம் நியமனமும் செய்யப்பட்டனர். அன்று நடந்த தேர்தலில் சுயாட்சி கட்சி 41 இடங்களை பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. நீதிக்கட்சி 21 இடங்களை பெற்று இருந்தது. சுயேச்சைகள் 36 பேர் வெற்றி பெற்றனர்.
எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களில் வெற்றி பெற்ற சுயாட்சி கட்சி ஆங்கிலேயர் ஆட்சியில் நாங்கள் பதவி ஏற்க மாட்டோம் என்றும், சபையை முடக்குவதே எங்கள் வேலை என்றும் கூறி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. அதேநேரத்தில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்ட் கோஷன் சாதுர்யமாக செயல்பட்டார். நெருக்கடியை தவிர்க்க சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்த ப.சுப்பராயனை அழைத்து அமைச்சரவை அமைக்க கோரினார். சுப்பராயனிடம் சொந்தமாக கட்சி பலம் இல்லை. ஆனால், அவருக்கு நீதிக்கட்சி ஆதரவு அளித்தது. எனவே கவர்னர் நியமித்த சுயேச்சைகளின் ஆதரவுடனும் இந்திய வரலாற்றிலேயே சுயேச்சை வேட்பாளர் முதல்-அமைச்சரான அதிசய நிகழ்வு நடந்தது.
பல்வேறு பொறுப்புகள்
சுப்பராயன் மத்திய பிரிவு நிலபிரபுக்கள் தொகுதி என்ற சிறப்பு தொகுதியில் போட்டியிட்டார். சிவஞான முதலியார் என்ற நிலபிரபுவை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ராஜாஜி, ஒமந்தார் ராமசாமி ரெட்டியார் ஆகியோரது அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களின் பொறுப்பை தன் வசம் வைத்து இருந்த சுப்பராயன், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர், சுதந்திர இந்தியாவின் இந்தோனேசியாவின் தூதுவர், மாநிலங்களவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மராட்டிய கவர்னர், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்தார்.
ப.சுப்பராயன் தனது 73-வது வயதில் 1962-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி காலமானார்.
"கவர்னர் நியமித்த சுயேச்சைகளின் ஆதரவுடனும் இந்திய வரலாற்றிலேயே சுயேச்சை வேட்பாளர் முதல்-அமைச்சரான அதிசய நிகழ்வு நடந்தது."
— வரலாற்று சுவடுகள்
Advertisement
Related Articles

2026 அஇஅதிமுக தேர்தல் அறிக்கை: மூடப்பட்ட அம்மா உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும்

கிளைச்செயலாளர் டூ பொதுச்செயலாளர் - எடப்பாடி பழனிசாமி எனும் ஆளுமை!




